Monday, September 5, 2016

கமல் கவிதை - எனக்குப் பிடித்த கவிதை


மனித வணக்கம்

தாயே, என் தாயே!
நான் உரித்த தோலே அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின் மானசீகச் சக்களத்தி, சரண்.

தகப்பா, ஓ தகப்பா!
நீ, என்றோ உதறிய மை
படர்ந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான் சொல்லுகின்றேன்.

தமயா, ஓ தமயா!
என் தகப்பனின் சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு.

தமக்காய், ஓ தமக்காய்!
தோழி, தொலைந்தே போனாயே
துணை தேடிப் போனாயோ?

மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம்
நான் தாண்டக் குமைந்திடுவாய்
சாத்திரத்தின் சூட்சமங்கள் புரியும் வரை

மகனே, ஓ மகனே!
என் விந்திட்ட விதையே
செடியே, மரமே, காடே
மறு பிறப்பே
மரண செளகர்யமே, வாழ்!

மகளே, ஓ மகளே!
நீயும் என் காதலியே
எனதம்மை போல
எனைப் பிரிந்தும் நீயின்பம் காண்பாயா?
இல்லை காதலித்த கணவனுக்குள் எனைத் தேடுவாயா?

நண்பா, ஓ நண்பா!
நீ செய்த நட்பெல்லாம்
நான் செய்த அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே.

பகைவா, ஓ பகைவா!
உன் ஆடையெனும் அகந்தையுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், குலமென்றும்
நீ துவைத்த துணிக் கடைகள்
நிர்மூலமாகி விடும்
நிர்வாணமே தங்கும்.

வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி,வாசி!
புரிந்தால் புன்னகை செய்.
புதிரென்றால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத் தோன்றின் பிழையும் திருத்து.
எனது கவி உனதும்தான்.
ஆம், நாளை உன் வரியில் நான் தெரிவேன்.

No comments:

Post a Comment